Saturday, 31 August 2013

குமரிக்கண்டம் | wikipedia.org


குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." 
  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
  • இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

உண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் வாதங்களை முன் வைக்கின்றனர்.

கடலியல் ஆதாரம்

1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

குருதி ஆதாரம்

அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை நிரூபிக்க சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மானிட இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாக குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாக குறிப்பிடுகிறார். அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.

இராமாயணத்தில் இடைச்சங்கம்:

  1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.
  2. கால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.
  3. திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான். சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.

நிலவியல்

தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது . இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்

  1. சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம். உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும் அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.
  2. சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன. பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது. மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.
  3. முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம். மேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் 'குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் உள்ளது.
  4. இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த)
அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூரிய லெமூரியா (20 மில்லியன் வருடங்களுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் வருடங்கள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய லெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்பதின் பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று.

சித்தரியல்

சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,
  1. காகபுசுண்டர் (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பதாக கருதப்படுகிறது)
  2. அகத்தியர்
  3. போகர்
  4. மகாவதார பாபா

மயன் பற்றிய குறிப்புகள்

குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன் பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.
ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்
மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.
வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்
வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது.

நூல் பதிவுகள்

கடல் கொண்ட தென்னாடு

கா. அப்பாத்துரையின் வாதங்கள்
1. மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.
2. மொழி அடர்த்தி
தமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம்.இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.
3. ஞாலவியல் அட்டவணை

எண் காலப்பகுதிப்பெயர் மண்தொகுதிகள் திண்மை செடிவகை உயிர்வகை மனித நாகரிக வகை
1. ஆர்க்கிலத்திக் (அ) ப்ரைமார்த்தியல் லாரண்டியன், கேம்ப்ரியன், சைலூரியன் 70,000 அடி மாலசு தலை ஓடற்றவை இல்லை
2. பழங்கற்காலம் டிவோனியன், நிலக்கரி, பெர்மியன் 42,000 அடி சூரல் காடுகள் மீன்கள் இல்லை
3. நடுகற்காலம் திரியோசிக், சுராசிக், க்ரெட்டேசியசு 15,000 அடி தேவதார காடுகள் ஊர்வன இலெமூரியா
4. கடைக்கற்காலம் இயோசீன், மியோசீன், பிளியோசீன். 5,000 அடி இலை உதிர் காடுகள் பால்குடிகள் அட்லாண்டியா
5. சிலைக்கற்காலம் டிலூவியல், ப்ளீசுடோசீன், அலூவியல் 500 அடி பயிற்றப்பட்ட காடுகள் பால்குடிகள் ஆர்யம்
அதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும்.
4. காலவணை(ஸ்காட் எலியட்)
எண் நாகரிகம் கால வருடங்கள்
1. இலெமூரியா கி.மு.2,00,000-50,000
2. அட்லாண்டியா கி.மு.50,000-40,000
3. ஆர்யம் கி.மு.4,000
இந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் கி.மு.2,00,000-50,000 வரை செல்லும்.

ஆங்கிலம்

மூலம்: ANCIENT INDIA
  1. “ANCIENT INDIA” புத்தகத்தில் தென்னிந்தியாவும் குமரிக்கண்டமும் இணைந்த பகுதிகளின் யூக வரைபடங்கள் கி.மு.30000, கி.மு.8000, கி.மு.4400, கி.மு.3100 மற்றும் கி.மு.2700 வரை கிடைக்கிறது.
  2. சங்க ஆதாரங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வட மொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருகின்றன.
  3. சடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற புத்தகத்தில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம்
    கிருதம் - (4864) வருடங்கள்.
    திரேதம் - (3648) வருடங்கள்.
    துவம் - (2432) வருடங்கள்.
    கலி - (1216) வருடங்கள்.
    மொத்தம் (12160) வருடங்கள்.
அதன்படி முருகனின் கலியுகம் கி.மு.16475-15259 ஆகும். ISIACயின் “ancient India” புத்தகத்தில் முருகனின் காலம் கி.மு.16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

குமரிக்கண்டம்

ஆங்கிலேயன் நம் நாட்டை விட்டுப்போய் 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் நம்மை பல நூறு வருடங்கள் ஆண்டது பெரிய விஷயம் அல்ல. ஆனால், நம் மனதில் நம் கலாச்சாரம், பண்பாடு, மொழி இவை எல்லாமே மிகவும் தாழ்வானது என்றும், அதில் பெருமை கொள்ள ஏதும் இல்லை என்றும் ஒரு மனநிலையை ஏற்படுத்திவிட்டானே... அது தான் கொடுமை. இந்த மனோ நிலை தலைமுறை தலைமுறையாக நம் மனதில் வேரூன்றிவிட்டது. இதனால் தான் நம்மை நினைத்து நமக்கு பெருமையும் இல்லை.... மகிழ்ச்சியும் இல்லை. நம்மூரில் சில வீடுகளில் ஒரு குழந்தை தன் அம்மாவை "மம்மி" என்று தான் கூப்பிடுகிறது , மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்பது தெரியாமல். நாம் நம் மொழியை, அடையாளத்தை, கலாச்சாரத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா ?
ஆயினும், ஓர் ஆச்சரியம் என்னவென்றால் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் பிறந்ததாகச் சொல்லப்படும் நம் தாய்மொழியாம் தமிழின் சிறப்பைப் பற்றி நமக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அயல் நாட்டவர்க்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிபர் மாளிகையில் தமிழ்,ஆங்கிலம், ரஷியம், சீனம், என்று 4 மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏன் என்று கேட்டதற்கு "ரஷிய மொழி எங்கள் தாய்மொழி. ஆங்கிலம் இன்று உலகத்தின் பல பகுதிகளில் பேசப்படும் மொழி. இன்னும் இரண்டு பழமையான மொழிகளில் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். கிரேக்கம், லத்தின், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவை தான் உலகின் மிகப் பழமையான மொழிகள். அவற்றில் கிரேக்கம், லத்தின், எபிரேயம், சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அதனால் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழிலும், சீனத்திலும் பெயர் பலகைகள் வைத்துள்ளோம்" என்று பதில் சொல்கிறார்கள்.
நம் தமிழ்மொழி பழமையானது என்று கூறும் போது அது எவ்வளவு பழமையானது என்று கேட்டால் பெரும்பாலனவர்கள் 2000 ஆண்டுகள் என்று பதில் சொல்கிறார்கள். இது சரியான பதில் தானா ?
நம் நாகரிகத்திற்கு வயது வெறும் 2000 ஆண்டுகள் அல்ல, சுமார் 10,000 ஆண்டுகள் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
நம்ப முடியவில்லையா ? இந்தியப் பெருங்கடலுக்கடியில் சற்று போகலாம் வாருங்கள்.
தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய இந்தியாவின் தென் பகுதி எப்படி இருந்தது என்று இந்த வரைபடத்தில் பார்க்கலாம்.


இந்த வரைபடத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில், அதாவது இன்றைய குமரிமுனையில் இருந்து தெற்கே வெகு தூரம் நீள்கிறதே அந்தப் பகுதியைத் தான் குமரிக்கண்டம் என்று அழைக்கிறார்கள். இதன் பரப்பளவு 2300 மைல்கள் வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த மண் தான் நம் மூதாதையர்கள் பிறந்த மண்ணென்றும், இதை லெமூரியா கண்டம் என்றும் சில பேர் அழைக்கிறார்கள். இந்தப் பகுதியை , முதலில் காய்சினவழுதி பாண்டியன் என்ற மன்னன் ஆண்டான் என்றும், இதன் தலை நகரம் தென்மதுரை என்றும் , இதில் ஏழுபனைநாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழுமதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு என்று 49 நாடுகள் இருந்ததாகவும், பஃறுளி , குமரி ஆகிய இரண்டு ஆறுகள் ஓடியதாகவும், குமரிமலை என்ற மலை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழகம், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி (கடல் கோள்) ஏற்பட்டது நம் அனைவருக்கும் தெரியும் . அதே போல் சுமார் 10,000 - 15,000 வருடங்களுக்கு முன்பும் ஒரு கடற்கோள் ஏற்பட்டதாகவும், அதில் இந்தக் குமரிக்கண்ட நிலப்பகுதி அழிந்து போனதாகவும் நிலவியலாளர்கள் கருதுகிறார்கள்.
இந்தக் கூற்றை மெய்ப்படுத்தும் விதமாக,
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."
என்ற சிலப்பதிகார வரிகள் சொல்லப்படுகின்றன.
இது ஒரு புறமிருக்க, தமிழ் மேல் இருந்த அளப்பரிய பற்றினாலும் , பக்தியாலும், பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்றும், முதல் சங்க காலம் கி.மு 14,000 முதல் 9500 வரை நடந்ததாகவும், இதில் 89 பாண்டிய மன்னர்களும் , 4449 புலவர்களும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த முதல் சங்கத்தில் பரிபாடல், முதுநரை, முதுகுருகு , பேரகத்தியம் உள்ளிட்ட நூல்கள் இயற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் திடீரென நிகழ்ந்த கடற்கோளால் பாண்டி நாடும் முழுமையாய் அழிந்து , தலைச்சங்க நூல்களும் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதை அடுத்து “பாண்டிய மன்னன் கடுங்கோன்” என்பவன் கபாடபுரம் என்னும் நகரத்தை அமைத்து அதில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை அமைத்தான் என்றும், இதன் கால கட்டம் கி.மு 9,200 முதல் 5500 என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்கள் பல இலக்கியங்களை படைத்ததாகவும் கூறப்படுகிறது. வால்மீகிராமாயணம், வியாச பாரதம் போன்றவற்றின் மூலமாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது.
"இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியைச் சுட்டுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் காலத்திலும் மீண்டும் ஒரு கடற்கோள் ஏற்படவே பாண்டிய நாடு அழிந்து போனதாகவும், இதில் தொல்காப்பியம் என்ற நூல் மட்டும் தப்பி பிழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதோடு நிற்கவில்லை.
கபாடபுரம் அழிவுற்ற பிறகு பாண்டி நாட்டையும் தமிழ்ச்சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான் என்றும் இந்தச் சங்க காலம் 1850 ஆண்டுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் தான் நம்மிடையே இருக்கின்றன.
சுமேரியன் நாகரிகம் 4000 ஆண்டுகள் பழமையானது. சிந்து சமவெளி நாகரிகம் 5000 ஆண்டுகள் பழமையானது. ஆனால் குமரிக்கண்டமும் , குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகா நகரமும் குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இதைப் பற்றி கிரகாம் ஹான்காக் என்ற இதழாளர் "UNDERWORLD" என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்தியாவின் NIO(National Institute Of Oceanography) என்ற நிறுவனத்தின் தலைமையில் 1993 ஆம் ஆண்டில் நாகை கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தொலைவில் 70 அடி ஆழத்தில் 2 மீட்டர் உயரத்தில் "U" வடிவில் ஒரு வடிவம் இருப்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதென்றும், இந்த வடிவங்கள் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார். மேலும், இந்த வடிவத்தைக் கட்டுவதற்கு மிக உயர் ரக தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,இன்னும் நூறடி ஆழத்தில் பல வடிவங்கள் இருக்கலாம் என்றும் ஹான்காக் சந்தேகிக்கிறார். இதைத் தவிர இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தனது "Underworld" என்ற நூலில் தருகிறார் ஹான்காக்.
இதெல்லாம் உண்மையாகும் பட்சத்தில் நம் நாகரிகம், குறைந்தது 10,000 ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிவிடும். கலாச்சாரமே இத்தனை ஆண்டுகள் பழமையானது என்றால் நம் மொழி எத்தனை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
இவை குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்ய அரசு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கினால் நம் நாகரிகம் பற்றிய பல உண்மைகள் வெளி வரும்.
ஆனால் அது நடக்குமா ? தமிழன் தலை நிமிர்ந்து நிற்பானா ?



http://puthiyathalaimurai.tv/kumarikandam/